ஹரிதாஸ் - விமர்சனம்
Friday , 22nd February 2013 10:29:17 AM
கிஷோர், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். தாதா பிரதீப் ராவத் குழுவை தீர்த்துக்கட்ட வேண்டியது, அவருக்கான அசைன்மெண்ட். அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது, தன் மகனைக் காப்பாற்ற வேண்டிய கடமை வந்து சேர்கிறது. மகனைப் பிரசவித்த அன்றே இறந்து விடுகிறார் கிஷோரின் மனைவி. கிராமத்திலுள்ள தன் தாயிடம் மகனை வளர்க்கும் பொறுப்பை அளித்துவிட்டு, தாதா வேட்டையை நடத்துகிறார் கிஷோர்.
பாதுகாத்து வந்த தாய் இறந்துவிட, மகனை தன்னுடன் அழைத்து வருகிறார் கிஷோர். தன்னையும், பிறரையும் புரிந்துகொள்ள முடியாமல் வேறொரு உலகத்தில் வாழும் மகன் பிருத்விராஜ் தாஸுக்கு எல்லாமே கிஷோர்தான். அதனால் வேலைக்கு லீவு போட்டுவிட்டு, என்கவுன்டர் செய்யும் பொறுப்பை இன்னொருவரிடம் கொடுத்து விட்டு, மகனுக்காக வாழத் தொடங்குகிறார்.
தன் கூட்டத்தையே சாய்க்கும் கிஷோர் மீது பிரதீப் ராவத்துக்கு கடும்கோபம். தலைமறைவாக இருக்கும் அவர், கிஷோரைப் பழிவாங்க காத்திருக்கிறார். ‘உங்க மகனுக்கு எந்த குறையும் இல்ல. அவன் வேற உலகத்துல இருக்கான். அவன் உலகத்துக்குள்ள நீங்க போனா, அவனை நல்லா புரிஞ்சுக்கிட்டு, அவனுக்குள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு, நிச்சயம் அவனை பெரிய ஆளாக்கலாம்‘ என்கிறார் டாக்டர் யூகிசேது. அதை கிஷோர் எப்படி சாதிக்கிறார்? ஆதியுடனான அசைன்மெண்ட்டை எப்படி முடிக்கிறார் என்பது கதை.
முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரி, பாசத்தைப் பிழியும் தந்தை என இரு முகங்களை அற்புதமாக வெளிப்படுத்துகிறார் கிஷோர்.
அவரது தோற்றம் போலீஸ் கேரக்டருக்கும், நடிப்பு தந்தை கேரக்டருக்கும் சாலப் பொருந்துகிறது. ‘உனக்கு என்ன தேவைன்னு எனக்கு தெரியலையேடா’ என்று மகனை கட்டிப்பிடித்து கதறும் காட்சியிலும், மராத்தான் பந்தயத்தில் தன் மகன் நிராகரிக்கப்படும்போது, ‘மத்தவங்க ஓடி ஜெயிச்சாதான் வெற்றி. இவன் இந்த போட்டியில கலந்துகிட்டாலே வெற்றிதான்’ என்று அவர் பேசும் காட்சி, தாய்ப்பாசத்துக்கு நிகரான தந்தைபாசம்.
அழகாகவும், அம்சமாகவும் சினேகா. மகனை பள்ளியில் சேர்க்கும் கிஷோர், வகுப்பறையில் அவனருகில் அமர்கிறார். அதைப் பார்க்கும் சினேகா, தொடர்ந்து பாடம் நடத்த வெட்கப்பட்டு நெளிவது யதார்த்தம். ‘உங்க மகனோட எதிர்காலத்தை பற்றி என்ன பிளான் வெச்சிருக்கீங்கன்னு தெரியாது. நான் அவனோட அம்மாவா இருக்க முடிவு பண்ணியிருக்கேன்‘ என்று பளிச்சென்று சொல்வது, பாந்தம். சினேகா வரும் ஒவ்வொரு காட்சியும், நெகிழ்ச்சியான கவிதை.
படத்தின் நிஜ ஹீரோ, ஹரியாக வரும் பிருத்விராஜ் தாஸ். ஆட்டிசம் பாதித்த சிறுவன் ஹரிதாஸாகவே வாழ்ந்திருக்கிறான். தாஸுக்கு விருதுகள் காத்திருக்கிறது. ஒரு வார்த்தைகூட வசனம் பேசாமல், கடைசியில் மென்மையாக உச்சரிக்கும் ‘அப்பா’ என்ற வார்த்தை, கண்ணீரை வரவழைக்கிறது. கிஷோரின் டிரைவராக வரும் சூரியின் சின்ன பிளாஷ்பேக்கும், டீச்சருடனான அவரது காதலும் ரிலாக்ஸ் டைம்.
விஜய் ஆண்டனியின் பின்னணி இசை, கதையின் கனத்தை தாங்கிப் பிடிக்கிறது. எல்லா பாடலிலும் உணர்வுப் பிரவாகம். ஆர்.ரத்னவேலுவின் கேமரா, படத்துடனேயே வாழ்ந்திருக்கிறது. உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தெரியாத ஹரியின் முகத்தில் விழும் வெளிச்சங்கள் மூலமே அவன் உணர்வை ரசிகர்களுக்கு உணர்த்துகிறார். ஏ.ஆர்.வெங்கடேசனின் இயல்பான வசனம் படத்துக்கு கூடுதல் பலம்.
ஆட்டிசம் பாதித்த சிறுவனின் உணர்வையும், அவனுடைய தந்தையின் போராட்டத்தையும் மட்டுமின்றி, ஒரு ஆக்ஷன் ஏரியாவையும் கலந்து படத்தை கமர்ஷியலாக்கி இருப்பது இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலனின் புத்திசாலித்தனம்.